நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய், வராக் கடன் உள்ளது. கோடிகளில் கடன் பெற்ற, கார்ப்பரேட் நிறுவனங்கள், வாங்கிய கடனை செலுத்தாமல் உள்ளன. வராக் கடன், வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. வராக் கடனை வசூலிக்க முடியாத வங்கிகளை, நலிந்த வங்கிகள் என அறிவித்து, அவற்றை மூடவோ அல்லது வேறு வங்கிகளுடன் இணைக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.
இந்நிலையில், வராக் கடனை வசூலிக்க, சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் எடுக்கும் அதே நேரத்தில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து,வராக் கடனை வசூலிக்க, புதிய யுக்தியில் இறங்கி உள்ளனர்.
கடன் பணத்தை வசூலிக்க, அந்த நிறுவனங்கள் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புதிய யுக்தியை கையாள துவங்கி உள்ளனர். மற்ற எல்லா தேசிய மய வங்கிகளுக்கும் வழிகாட்டியாக, ஆந்திரா வங்கியின், அண்ணா சாலை கிளை ஊழியர்கள், நேற்று, சென்னையில், ஜெய்ப்பூர் சுகர்ஸ், எம்ப்பீ சுகர்ஸ்' ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன், 'கடனை திருப்பிக் கொடு' என்ற, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
